நாங்குநேரி இளைஞர் கொலை வழக்கில், ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மஞ்சங்குளத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு கோதைச்சேரியைச் சேர்ந்த செல்வக்குமார் கொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில், ராக்கெட் ராஜா எனப்படும் ஆறுமுக பாண்டியன் தூண்டுதலின் பேரில் முருகேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து இக்கொலையைச் செய்ததாக நாங்குநேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் முருகேசன், ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் மீது கொலை, கூட்டுச்சதி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, திருநெல்வேலி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. நேற்று தீர்ப்பு நாளையொட்டி ராக்கெட் ராஜா பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
காவல் ஆய்வாளர் முத்துகணேஷ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நீதிமன்ற வளாகத்தில் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி ராக்கெட் ராஜா உட்பட 11 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
